பரிசோதனைக் கட்டத்தில் உள்ள சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசர தேவை கருதி நோயாளிகளுக்கு பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி வழங்கியுள்ளது .
மனிதர்கள் உடலில் செலுத்தப்பட்டு, ஆறு வார கால பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஜூலை மாதம் தொடங்கியது. இந்த பரிசோதனை இன்னும் முற்றுப்பெறவில்லை.
இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை முகாமை தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வழங்கும் தரவுகளின்படி அமீரகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை 80 ஆயிரத்து 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 399 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு சிறிய அளவில் பக்கவிளைவுகள் இருந்தன. ஆனால் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில் வெற்றிபெற்றுள்ளது. 28 நாட்களில் இரண்டு தடவைகள் செலுத்தப்பட்ட இந்தத் தடுப்பூசி, இந்த பரிசோதனையில் பங்கேற்ற 100% தன்னார்வலர்கள் உடல்களிலும் நோய் எதிர்ப்பு அணுக்களை உருவாகியுள்ளதாக ஜூலை மாதம் அபுதாபி அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்